Archives: டிசம்பர் 2023

தெய்வீக ஞானம் உயிர்களை இரட்சிக்கிறது

ஒரு தபால்காரர், தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு கொடுத்த தபால்கள் அந்த பெட்டியிலிருந்து எடுக்கப்படாமல் அதிலேயே நாளுக்கு நாள் தேங்கியிருப்பதைக் கண்டு சந்தேகப்பட்டார். அந்த வீட்டில் ஒரு வயதான பெண்மணி தனியாக வசித்து வருவது அவருக்கு தெரியும். அவரும் அனுதிமும் தபாலை சேகரித்துக்கொள்வார் என்பதை அறிந்திருந்த அந்த தபால்காரர், அந்தப் பெண்மணியின் அண்டை வீட்டாரில் ஒருவரிடம் அதைக் குறித்து விசாரித்தார். சந்தேகப்பட்ட அவர்கள் இருவரும், ஒரு உதிரி சாவியின் மூலம் அந்த பெண்மணியின் வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அவள் நான்கு நாட்களுக்கு முன்பு தரையில் மயங்கி விழுந்துகிடப்பதை கண்டறிந்தனர். அவளால் எழுந்திருக்கவோ உதவிக்கு அழைக்கவோ முடியவில்லை. தபால் ஊழியரின் ஞானமும், அக்கறையும், செயலூக்கமான செய்கையும் அவளுடைய உயிரைக் காப்பாற்றியது.

“ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்” (11:30) என்று நீதிமொழிகள் கூறுகின்றன. சரியானதைச் செய்வதன் மூலமும், கடவுளுடைய ஞானத்தின்படி வாழ்வதன் மூலமும் வரும் பகுத்தறிவு நம்மை மட்டுமல்ல, நாம் சந்திப்பவர்களையும் ஆசீர்வதிக்கும். அவரையும் அவருடைய வழிகளையும் கனப்படுத்துகிற கனிகொடுக்கிற வாழ்க்கையானது, நல்ல மற்றும் புத்துணர்ச்சியூட்டும் வாழ்க்கையாக அமையும். நம்முடைய கனிகள் மற்றவர்களை பராமரித்துக்கொள்ளவும், அவர்களின் வாழ்க்கையை பொருட்படுத்தவும் நம்மைத் தூண்டுகிறது.

நீதிமொழிகளின் எழுத்தாளர் புத்தகம் முழுவதும் வலியுறுத்துவது போல, கர்த்தரை சார்ந்திருப்பதிலேயே நம்முடைய ஞானம் வெளிப்படுகிறது. “முத்துக்களைப் பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல” (நீதிமொழிகள் 8:11). தேவன் தரும் ஞானம் நம் வாழ்நாள் முழுவதும் நம்மை வழிநடத்த போதுமானது. இது நித்தியத்திற்கு நேராய் ஆத்துமாக்களை வழிநடத்தக்கூடியது.

கிறிஸ்மஸ்க்கு அடுத்த நாள்

கிறிஸ்துமஸ் தினத்தின் மகிழ்ச்சிக்குப் பிறகு, அடுத்த நாள் கொஞ்சம் மந்தமாவதாக உணர்ந்தேன். நாங்கள் இரவு முழுவதும் நண்பர்களுடன் தங்கியிருந்தோம். ஆகையால் சரியாக தூங்கவில்லை. பின்னர் நாங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்லும் போது எங்கள் கார் பழுதடைந்தது. பின்னர் பனி பெய்யத் தொடங்கியது. நாங்கள் காரை அங்கேயே விட்டுவிட்டு, பனிமூட்டமான உணர்வில் டாக்ஸியில் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

கிறிஸ்துமஸ் தினத்திற்குப் பிறகு மந்தமான உணர்வை பெற்றுக்கொண்டவர்கள் நாங்கள் மட்டுமல்ல. அளவுக்கு அதிகமாக உண்பதாலோ, வானொலியில் இருந்து பாடல்கள் திடீரென காணாமல் போனதாலோ, போன வாரம் வாங்கிய பரிசுப் பொருட்கள் பாதி விலையில் விற்பனையாகிவிட்டதாலோ, கிறிஸ்துமஸ் தினத்தின் மாயாஜால மகிழ்ச்சியானது விரைவில் கலைந்துவிடும்!

இயேசு பிறந்த நாளின் அடுத்த தினத்தைப் பற்றி வேதாகமம் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் பெத்லகேமுக்கு நடைபயணமாய் வந்து, தங்குமிடமில்லாமல் அலைந்து, பிள்ளைபேறு பெற்றெடுத்த பிரசவ வலியோடு மரியாள் இருக்க, கூடியிருந்த மேய்ப்பர்கள் சொல்லாமல் கலைந்து சென்றது (லூக்கா 2:4-18) போன்ற தொடர் சம்பவங்களினால் மரியாளும் யோசேப்பும் சோர்ந்துபோயிருந்திருக்கக்கூடும் என்று நாம் கற்பனை செய்து பார்க்கலாம். ஆயினும், மரியாள் தனது பிறந்த குழந்தையைத் தொட்டிலில் வைத்து, தேவ தூதன் அவளை சந்தித்த சம்பவம் (1:30-33), எலிசபத்தின் ஆசீர்வாதம் (வச. 42-45), மற்றும் அவளுடைய குழந்தையின் மகிமையான எதிர்காலம் என்று அவைகளைக் குறித்தே யோசித்துக்கொண்டிருக்கக்கூடும் என்று நான் கற்பனை செய்கிறேன். மரியாள் தன் இருதயத்தில் இதுபோன்ற விஷயங்களை “சிந்தனைபண்ணினாள்” (2:19) என்று வேதம் சொல்கிறது. அது அவளுடைய அன்றைய மனச்சோர்வையும் உடல் வலியையும் குறைத்திருக்க வேண்டும்.

ஒருவேளை நம்முடைய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் அடுத்த நாள், வெறுமனே கழிகிற நாளாய் இருக்கக்கூடும். ஆனால் அந்த நாட்களில் நாமும் மரியாளைப் போலவே, நம் உலகத்திற்கு வந்தவரைப் பற்றி சிந்திப்பதன் மூலம், அவருடைய பிரசன்னத்தால் நிறைவோம்.

கிறிஸ்து பிறப்பின் வாக்குத்தத்தம்

நவம்பர் 1962இல், இயற்பியலாளர் ஜான் மௌச்லி, “சராசரியான பையன் அல்லது பெண் கணினியில் தேர்ச்சிபெற முடியாது என்று கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை” என்று கூறுகிறார்.  மௌச்லியின் கணிப்பு அந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கதாகத் தோன்றியது. ஆனால் அது ஆச்சரியப்படுத்தும் வகையில் துல்லியமானது. இன்று, கணினி அல்லது கையடக்க சாதனத்தைப் பயன்படுத்துவது ஒரு குழந்தை கற்றுக் கொள்ளும் ஆரம்ப திறன்களில் ஒன்றாகும்.

மௌச்லியின் கணிப்பு உண்மையாகிவிட்டாலும், கிறிஸ்துவின் வருகையைப் பற்றி வேதாகமத்தில் கூறப்பட்ட மிக முக்கியமான கணிப்புகள் உள்ளன. உதாரணமாக, மீகா 5:2இல், “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும் இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது” என்று அறிவிக்கிறது. தாவீதின் வம்சாவளியில் வரும்படிக்கு இயேசுவை பெத்லகேமுக்கு தேவன் அனுப்பினார் (லூக்கா 2:4-7 பார்க்கவும்).

இயேசுவின் முதல் வருகையை துல்லியமாக முன்னறிவித்த அதே வேதாகமம், அவருடைய இரண்டாம் வருகையையும் உறுதியளிக்கிறது (அப் 1:11). இயேசு தம்முடைய சீஷர்களிடம், அவர்களுக்காக தான் திரும்பி வருவதாக வாக்குப்பண்ணுகிறார் (யோவான் 14:1-4).

இயேசுவின் பிறப்பைச் சுற்றியுள்ள அனைத்து காரியங்களையும் ஆராயும் இந்த கிறிஸ்மஸ் நன்னாளிலே, அவரை நாம் முகமுகமாய் தரிசிக்கப்போகும் அவருடைய வருகை தியானித்து, அதற்காக நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள பிரயாசப்படுவோம்.

கிறிஸ்மஸ் நட்சத்திரம்

“நீ அந்த நட்சத்திரத்தைக் கண்டுபிடித்துவிட்டால், வீட்டிற்கு வரும் வழியை நீ கண்டுபிடித்துவிடலாம்.” சிறுவயதில் வடக்கு நட்சத்திரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்று என் தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்தபோது சொன்ன வார்த்தைகள் இது. என்னுடைய அப்பா போர்க்காலத்தில் ஆயுதப் படைகளில் பணிபுரிந்தார். அவரது வாழ்க்கை பெரும்பாலும் இரவு நேர பயணங்களாய் இருந்த தருணங்கள் அவைகள். அதனால் பல விண்மீன்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்கள் ஆகியவற்றை எனக்கு கற்றுக்கொடுத்து, அதை நான் சரியாய் தெரிந்திருக்கிறேனா என்பதை அவ்வப்போது உறுதிசெய்துகொள்வார். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக பொலாரிஸ் நட்சத்திரத்தைக் எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அந்த நட்சத்திரத்தின் இருப்பிடத்தை அறிந்தால், நான் எங்கிருந்தாலும் திசையின் உணர்வைப் பெற முடியும்; நான் இருக்க வேண்டிய இடத்தைக் கண்டுபிடிக்க முடியும்.

முக்கியமான மற்றொரு நட்சத்திரத்தைப் பற்றி வேதம் கூறுகிறது. “கிழக்கிலிருந்து சாஸ்திரிகள்” (இன்று ஈரான் மற்றும் ஈராக்கைச் சூழ்ந்துள்ள ஒரு பகுதியிலிருந்து) ராஜாவாகப் பிறந்திருக்கிறவரின் பிறப்புக்கான அறிகுறிகளை வானத்தில் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எருசலேமுக்கு வந்து, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்” (மத்தேயு 2:1-2).

பெத்லகேமின் நட்சத்திரம் தோன்றுவதற்கு என்ன காரணம் என்று வான சாஸ்திரிகளுக்குத் தெரியாது. ஆனால் இயேசுவை உலகத்திற்கு விடிவெள்ளி நட்சத்திரமாய் சுட்டிக்காட்ட தேவன் அதை உண்டாக்கினார் என்று வேதம் சொல்லுகிறது (வெளிப்படுத்துதல் 22:16). கிறிஸ்து நம் பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றவும், நம்மை மீண்டும் தேவனிடம் வழிநடத்தவும் வந்தார். அவரைப் பின்தொடர்வதே நம் வீட்டிற்கு செல்லும் ஒரே வழி.

கிறிஸ்துவில் ஐக்கியம்

எங்கள் ஞாயிறு காலை ஆராதனைக்குப் பிறகு விளக்குகளை அணைப்பதற்கும் தேவாலயத்தைப் பூட்டுவதற்கும் யார் பொறுப்பு என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த நபரைப் பற்றி எனக்கு ஒன்று தெரியும்: ஞாயிற்றுக்கிழமை இரவு உணவை அவர் தாமதமாகவே உண்ண நேரிடும். ஏனென்றால், பல விசுவாசிகள் ஆராதனைக்கு பின்னர், தேவாலயத்தில் சுற்றித் திரிவதை விரும்புகிறார்கள். அவர்களின் வாழ்க்கை தீர்மானங்கள், இதய பிரச்சினைகள், அனுதின போராட்டங்கள் மற்றும் பலவற்றைப் பற்றி பேசுகிறார்கள். ஆராதனை முடிந்து சபையில் ஒவ்வொருவரையும் பார்த்து ஐக்கியங்கொள்ளும் அந்த தருணம் மிகவும் மகிழ்ச்சிகரமானது.

ஐக்கியம் என்பது கிறிஸ்துவைப் போல் வாழும் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். சக விசுவாசிகளுடன் நேரத்தை செலவழிப்பதன் மூலம் வரும் ஐக்கியம் இல்லாமல், ஒரு விசுவாசியாக இருந்தால் பல நன்மைகளை நாம் வாழ்க்கையில் இழக்க நேரிடும்.

உதாரணமாக, “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:11) என்று பவுல் வலியுறுத்துகிறார். எபிரெயரின் ஆசிரியர், சபைக்கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள் (10:25) என்று கூறுகிறார். ஏனென்றால் “ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்” என்றும் ஆலோசிக்கிறார். மேலும் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து” (வச. 24) செயல்படும்படிக்கு அறிவுறுத்துகிறார்.

இயேசுவுக்காக வாழ அர்ப்பணிக்கப்பட்ட மக்களாக, “பலவீனரை தாங்குங்கள்” என்னும் ஆலோசனையை ஏற்று, நீடிய சாந்தமாய் இருக்கும்போது, விசுவாசத்திற்கும் தேவனுடைய ஊழியத்திற்கும் நாம் நம்மை தகுதிப்படுத்துகிறோம் (1 தெசலோனிக்கேயர் 5:14). தேவனுடைய துணையோடு அவ்வாறு வாழும்போது, மெய்யான ஐக்கியத்தை அனுபவிக்கவும், “உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்போதும் நன்மை செய்ய” நாம் நாடலாம் (வச. 15).